panguvaniham எழுதியவை | ஜூலை 10, 2009

10, ஜூலை 2009

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் போனது நேற்று….ரிலையன்ஸ் பங்குகள் சுணங்கியதே இதற்கு காரணம்.

பக்கவாட்டில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது நேற்றைய சந்தைகள். இத்தகைய பக்கவாட்டு நகர்வுகள் சந்தையின் பலவீனத்தை உறுதி செய்வதாகவே கருத வேண்டும். தற்போதைய நிலையில் உயர்வுகள் வந்தாலும் அவை தற்காலிகமானதாவே இருக்கும்.

இன்றைக்கு சந்தையின் துவக்கத்தினை Infosys நிறுவனத்தில் காலாண்டு முடிவுகள் தீர்மானிக்குமென கருதுகிறேன்.பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லாததால் ஓரளவுக்கு திருப்திகரமான முடிவுகள் கூட சந்தையில் நம்பிக்கையினை ஏற்படுத்துமென எதிர்பார்க்கிறேன்.

வாரயிறுதியின் காரணமாய் வர்த்தகர்கள் தங்கள் கையிறுப்பினை அடுத்த வாரத்திற்கு எடுத்துசெல்வதை தவிர்க்கும் முனைப்பில் ஒரு Short covering rally..யினை எதிர்பார்க்கலாம். நாளின் பிற்பாதியில் இதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தேசிய நிஃப்டி 4143 நிலைகளை கடக்கும் பட்சத்தில் 4213 வரையிலான உயர்வுகளுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன. கீழ் நிலையில் 4017 நிலைகளில் ஒரு Buying pressure உருவாகும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்.

நேரமின்மையால் விரிவாய் எழுதிட இயலவில்லை…தின வர்த்தகர்கள் ஆகக்கூடிய கவனத்துடன் செயல்பட வேண்டிய தினங்கள் இவை! கவனம் தேவை !

panguvaniham எழுதியவை | ஜூலை 9, 2009

09, ஜூலை 2009

நேற்றைய பதிவில் குறிப்பிட்ட வகையில் பெரிதான சலனங்கள் இல்லாது முக்கிய தாங்கு நிலைகளை உடைத்து முடிவடைந்திருக்கிறது. சந்தைகள் தற்போது Gap Fill zone ல் நுழைந்திருக்கிறது. எனவே நுட்பகூறுகள் சந்தைகளை 3700 வரையில் கொண்டு செல்லும் சாத்தியங்களை உருவாக்கியிருக்கின்றன.

எல்லோரும் சந்தையில் 3700 நிலைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நெருடும் சில காரணிகளை உங்கள் பார்வையில் வைத்திட விரும்புகிறேன்.

ரிலையன்ஸ் நிறுவன பங்கு வலுவாக மீளும் நிலைகளில் இருப்பதை கவனிக்கவும். தனியாளாக சந்தைகளை புரட்டிப் போடும் வல்லமை உடையது என்பது கடந்த கால சரித்திரம்.

தேசிய நிஃப்டி வலுவிழந்த அளவிற்கு மும்பை சென்செக்ஸ் வலுவிழக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

கடந்த மூன்று தினஙகளில் தேசிய நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் இழந்திருக்கின்றன. தற்போதைய சூழலில் ஒரு சிறிய உயர்வுகளுக்குப் பின்னர் சரிவுகள் தொடரும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

எனவே இன்றைய சந்தைகளைப் பொறுத்தவரையில் ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

பொதுவில் இன்றைய சந்தையில்  3870 – 4120 நிலைகள் முக்கியமான திருப்ப நிலைகளாய்(Reversal points) அமையும்.

panguvaniham எழுதியவை | ஜூலை 8, 2009

08, ஜூலை 2009

இன்றைய சந்தைகளை குறித்து பெரிதாய் அலசிட ஏதுமில்லை என்றே நினைக்கிறேன். சந்தையின் பலவீனம் தொடர்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக முக்கியமான தாங்கு நிலைக்கு மேல் சந்தைகள் முடிவடைந்திருந்தாலும் சந்தைகள் பெரிய அளவில் சரியும் வாய்ப்புகளை இன்னமும் தக்க வைத்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

தேசிய நிஃப்டியில் 4093 நிலைகளுக்கு கீழ் இன்றைய சந்தைகள் முடிவடையுமானால் எதிர்பார்க்கும் பெரிய சரிவுகள் துவங்கும். இன்றைய சந்தையின் துவக்கத்தினை ஆசிய சந்தைகளே நிர்ணயிக்கும். பெரும்பாலான ஆசிய சந்தைகள் பின்னடையும் நிலையில் இருப்பது காளைகளுக்கு பாதகமான செய்தி.

ரிலையன்ஸ் பங்குகள் சந்தைகளை காப்பாற்றுமென எதிர்பார்க்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைக்கும் சந்தைகள் 4093 நிலைகளை தக்கவைக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் அதிவேகமான மீட்சியினை எதிர்பார்க்கலாம்.

தேசிய நிஃப்டியில் பின்வரும் நிலைகளில் கவனமாயிருஙகள்.

4092, 4141, 4173, 4194, 4225, 4253

திரு.விஜய்கனேஷ் அவர்கள் Andrew’s pitchfork பற்றி ஒரு ப்திவினை எழுதியிருக்கிறார். அதனை இந்த இனைப்பில்  காணலாம். தமிழில் இம்மாதிரியான எழுத்துக்கள் ஊக்குவிக்கப் படுதல் அவசியம்.

panguvaniham எழுதியவை | ஜூலை 7, 2009

07, ஜூலை 2009

நேற்றைய பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு சந்தைகள் உங்களுக்கு சரியான பதிலை தந்திருக்குமென நம்புகிறேன்.

”திருடனுக்கு தேள் கொட்டியது போல….”

இதுதான் நேற்றைய சந்தைகளின் நிலமை. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் மத்திய நிதி நிலை அறிக்கையினை பாராட்டிக் கொண்டிருக்கும் சந்தை வல்லுனர்களுக்கும் இதுதான் நிலமை.

கடந்த சில நாட்களாய் ஊடகங்களின் வாயிலாக சந்தைகளுக்கு சாதகமாய் அறிவிப்புகளை தர மத்திய நிதியமைச்சகத்தின் மீது அளவிலா அழுத்தம் தரப்பட்டது. இது ஒரு வகையான ஊடக வன்முறை என்றே சொல்லலாம். ஆனால் எவ்வித நிர்பந்தங்களுக்கும் வளைந்து தராமல் இந்தியா என்பது பங்குச்சந்தைகள் மட்டுமே அல்ல என்பதை மத்திய நிதியமைச்சர் பொட்டில் அடித்தாற்போல உணர்த்தியிருக்கிறார்.

ஊரகப் பகுதிகள் வளராது நகரங்கள் மட்டுமே கொழித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்ட அரசு இவற்றின் இடைவெளியினை குறைக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையினை தயாரித்திருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது காலத்தின் கட்டாயம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி சந்தைகளுக்கு திரும்புவோம். எதிர்பார்ப்புகளின் மீதான சந்தைகள் இப்படி சீட்டுக்கட்டு கோபுரம் போல சரிவதை தவிர்க்க இயலாதுதான். எனினும் நுட்பங்களின் அடிப்படையில் சந்தைகளை அணுகினால் புலப்படும் விதயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தேசிய நிஃப்டியினை பொறுத்தவரையில் 4141 என்கிற நிலை வலுவான தாங்கு நிலைகளில் ஒன்றாக இருந்து வந்தது. நேற்றைய சரிவில் இந்த நிலைகள் உடைபட்டாலும் நாளின் முடிவில் இந்த நிலைகளுக்கு மேல் முடிவடைந்திருப்பதை கவனிக்கவும்.

தற்போதைய நிலையில் மீதமிருக்கும் ஒரேயொரு தாங்கு நிலை 4093 ஆகும். இந்த நிலைகள் உடைபடுமாயின் ஒரு பெரிய Head and Shoulder Pattern செயல்படத்துவங்கி சந்தைகள் 3700 கள் வரையில் சரியும் அபாயமிருப்பதை புரிந்து கொள்ளுங்கள். என்வரையில் சந்தையின் உண்மையான நிலை, இந்த நிலைகளில் இருப்பதாகவே கருதுகிறேன்.

எனினும் தற்போதைய சூழலில் தேசிய நிஃப்டியில் 4093 நிலைகள் உடைபடாதவரையில் சந்தையின் மேல் நோக்கிய நகர்வுகளுக்கு பாதிப்பிருக்காதென்றே தோன்றுகிறது. புதிய நிலையெடுக்க நினைப்பவர்கள் தேசிய நிஃப்டியில் 4141 நிலைகளை Stoploss ஆக கொண்டு களத்தில் இறங்கலாம்.

நாளின் துவக்கத்தில் கடைசி தாங்கு நிலையான 4093 உடைபடும் பட்சத்தில் தினவர்த்தகர்கள் ஆகக்கூடிய கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டியதிருக்கும்.

அரசியல் மற்றும் பட்ஜெட் மாயைகள் உடைந்துவிட்ட நிலையில் இனி வரும் நாட்களில் நமது சந்தைகள் சர்வதேச சந்தைகளோடு இனைந்து செல்லத் துவங்குமென எதிர்பார்க்கிறேன்.

வரும் நாட்களில் இனி Commodities பற்றிய எனது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

panguvaniham எழுதியவை | ஜூலை 6, 2009

06, ஜூலை 2009

இன்றைய சந்தைகள் இப்படித்தானிருக்கும், அல்லது  வரும் நாட்களில் இன்ன மாதிரியான நகர்வுகள் இருக்கும் என்பது மாதிரியெல்லாம் இன்றைக்கு எழுதப்போவதில்லை.அதில் அர்த்தமும் இல்லை.மான்புமிகு மத்திய நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையின் கடைசி வாசகத்தினை வாசித்து முடிக்கும் வரையில் தின வர்த்தகர்களுக்கு சந்தையில் வேலையில்லை என்றே கருதுகிறேன்.

வழமைக்கு மாறாக இன்றைக்கு சில விரவங்களை உங்களின் பார்வைக்கு வைத்திடலாமென நினைக்கிறேன்.

தேசிய நிஃப்டி சனவரி 2008 ல் 4500களில் தரையிறங்கியிருந்ததும், அடுத்த பத்து மாதங்களில் 2300 நிலைகளுக்கு சரிந்ததும், அக்டோபர் 2008 முதல் மார்ச்2009ன் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தில் 2500 க்கும் 3000 த்திற்கும் இடையில் தத்தளித்ததையும் அறிவோம்.

மார்ச் மாதவாக்கில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியான பின்னர் 2500 களில் இருந்து புறப்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே மாதம் 14ம் தேதிகளில் 3500 களில் மையம் கொண்டிருந்த சந்தைகள்…தேர்தல் முடிவு வெளியான பின்னர் தடைகளை உடைத்துப் பாயும் புது வெள்ளமெனெ 4700 கள் வரையில் உயர்ந்து கடந்த வெள்ளியன்று 4400 களில் முடிவடைந்திருக்கிறது.

மேலே சொன்னவைகள் அனைத்தும் நீங்கள் அறிந்த ஒன்றே…இதன் பின்னனியில் எனக்குள் எழும் சில கேள்விகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதனை அலசும் வாய்ப்பினையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

  • கடந்த ஆறு மாத காலகட்டத்தில் சர்வதேச சந்தைகள் நமது சந்தைகளுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன?
  • கடந்த ஆறு மாதங்களில் நமது பொருளாதாரம் உண்மையில் சீரடைந்திருக்கிறதா?
  • நாட்டின் பணவீக்கம் முற்றிலுமாய் ஒழிந்து பணவாட்டம் வந்துவிட்ட நிலையில் விலைவாசிகள் கொஞ்சமாவது குறைந்திருக்கிறதா?
  • மத்திய ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தினை குறைத்த பின்னரும் பெரும்பான்மையான வங்கிகள் ஏன் வட்டி விகிதத்தினை குறைக்க முன் வரவில்லை.?
  • கடந்த ஆறுமாதங்களில் சந்தைகள் 100% க்கும் மேல் உயர்ந்திருக்கின்றன. இதற்கு இனையாகவோ அல்லது எதிர்பார்ப்புகளுக்கு மேலாக நமது நிறுவனங்களின் லாபத்தொகை அதிகரித்திருக்கிறது என கருதுகிறீர்களா?
  • வேலையிழப்புகள், சம்பளக்குறைப்புகள் அதிகரித்து வருகிறதா அல்லது முற்றாக நிலமை சீரடைந்துவிட்டதா?
  • பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு நமது பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும்?
  • தாமதமாகும் பருவமழையினால் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் எத்தகையதாக இருக்கும்?
  • சந்தையின் தற்போதைய உயர்வுகள் அரசியல் நோக்கங்களுக்காக உயர்த்தப்பட்டிருக்கிது என நினைக்கிறீர்களா?
  • அன்னிய நிறுவன முதலீடாளர்கள் நம்பகமானவர்களா? அல்லது சிறு முதலீட்டாள்ர்களை திட்டமிட்டு உறிஞ்சும் தந்திரக்காரர்களா?
  • நமது சந்தைகளின் தற்போதைய உயர்வுகள் முற்றாக எதிர்பார்ப்புகளின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது, இது சீட்டுக் கட்டு கோபுரம் போன்றதென நினைக்கிறேன் …நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • இந்த கேள்விகளுக்குப் பின்னால் உங்களுக்குத் தோன்றுவதென்ன….தற்போதைய உயர்வுகள் நம்பகமானவையா?

நண்பர்களே…

பங்குவணிகம் வலைத்தளத்தின் பரிட்சார்த்த முயற்சியாக உரையாடி ஒன்றினை இனைத்திருக்கிறேன். இந்த இனைப்பினை சொடுக்குவதன் மூலம் நீங்களும் அந்த அறையில் பங்கேற்கலாம். சந்தை நேரங்களின் எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் தளமாக இதை செயல்படுத்த எண்ணியிருக்கிறேன்.

 

panguvaniham எழுதியவை | ஜூலை 3, 2009

பதிவு எண் 800/ 03, ஜூலை 2009

நண்பர்களே….

இரண்டரை வருடங்கள், சற்றேறக்குறைய 980 நாட்கள்….800 வது பதிவு….

இத்தனையும் விளையாட்டாய் எதிர்பார்ப்புகள் இல்லாது துவங்கிய முயற்சியே….

அப்போது தமிழில் யாரும் செய்யாத ஒன்றை செய்வதாக உணர்ந்த பெருமிதம்…

இன்றைக்கு தமிழில் என்னை விடச் சிறப்பாய் பதிவிட பலர் வந்து விட்ட நிதர்சனத்தில் நானும் அவர்களுடன் ஓடிக்கொண்டிருக்கிற பெருமிதம்….

இடையிடையே தளர்ந்தாலும், ஓய்வெடுத்து எழுத ஆலோசனையும் கொடுத்து எனக்காய் காத்திருந்த, காத்திருக்கிற ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்புகளை தக்கவைத்திருக்கும் பெருமிதம்…

இரண்டரை வருடத்தில் சிலருக்கேனும் இந்த தளம் பயனுள்ளதாயிருந்ததும், அவர்கள் தங்களின் வெற்றிகளை என்னோடு பகிர்ந்து கொண்டபோது உணர்ந்த  பெருமிதம்….

இப்படி நிறைவான உணர்வுகளோடு இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

குறைகள் இல்லாமலில்லை, பட்டியலிட நிறையவே குறைகள் இருக்கின்றன.

எனது தொழில் ஒன்றில் பங்குதாரகளால் ஏமாற்றப்பட்டு சற்றேறக்குறைய இருபது லட்சத்திற்கும் மேல் கடன் என் தலையில் கட்டப்பட்ட போது,அதை அடைக்க போராடிய தருணத்தில் நான் தளர்ந்து போனதென்னவோ உண்மைதான். கவனக்குவிப்பு இல்லாது தினமும் பதிவெழுதுவது சாத்தியமில்லை என்பதால்தான் பதிவுகளை இடைநிறுத்த வேண்டி வந்தது. ஒரு கட்டத்தில் பங்குவணிகம் தளத்தினை வேறு யாரும் தொடர்ந்து நடத்த முன்வந்தால் அவர்களிடம் ஒபப்டைத்துவிடவும் தயாராக இருந்தேன்.

கட்டண சேவையொன்றினை ஆரம்பித்த நிலையில், எனது பிரச்சினைகளின் தீவிரத்தினால் சேவையினை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதால் அந்த முயற்சியினை ஒரே மாதத்தில் நிறுத்தியது பெரிய அளவில் பின்னடைவு, என்னை பெரிதாய் நம்பியிருந்தவர்களுக்கு உதவ முடியாது போன குற்ற உணர்ச்சி இன்னமுமிருக்கிறது.

பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காத குறையுமிருக்கிறது. வரும் நாட்களில் இதை நிவர்த்திக்க முயற்சிக்கிறேன்.

இறுதியாக ஒன்று…

நண்பர்களே ! இத்தனையும் உங்களால் மட்டுமே சாத்தியமானது…

அத்தனை அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்கிற ஒற்றைச்சொல் சிறிய வார்த்தையாகவே இருக்கும்…என்னில் அதன் அர்த்தமும், ஆழமும் பெரிது.

நன்றி….

-சரவணக்குமார்.

 


இனி இன்றைய சந்தைகளை கவனிப்போம்…

வாரத்தின் கடைசி நாள்,மத்திய நிதி நிலை அறிக்கை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

இன்றைக்கு மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்டுகிறது.

இந்த இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சந்தைகள் தெளிவான திசையொன்றினை எடுக்கும். தினவர்த்தகர்கள் இயன்றவரையில் இன்றைய சந்தையினை தவிர்த்துவிடுவது நல்லது.

தேசிய் நிஃப்டியில் 4283 மிக முக்கிய தாங்கு நிலையாக இருக்கும் இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் 4222 வரையில் சந்தைகள் கீழிறங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மேல் நிலையில் 4366 வலுவான தடை நிலையாக இருக்கும்.

panguvaniham எழுதியவை | ஜூலை 2, 2009

02, ஜூலை 2009

நேற்றைய சந்தைகள் எதிர்பார்த்த எல்கைகளுக்குள் ஊடாடியிருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு இன்றைய சந்தையின் துவக்கத்தில் எதிரொலிக்கும்.

மற்றபடி மத்திய நிதி நிலை அறிக்கை வெளியாகும் வரையில் நுட்பங்களின் பாற்பட்டு சந்தைகள் இயங்காது என்றே கருதுகிறேன். நுட்பங்களின் படி தற்போதைக்கு சந்தைகள் பக்கவாட்டில் நகரும் வாய்ப்புகளையே எதிர்பார்க்கிறேன்.

எனினும்  தேடிய நிஃப்டியில் 4352 நிலைகள் உடைபடுமாயின்  4400 கள் சாத்தியமாகும். கீழ் நிலையில் 4297 வலுவான தடை நிலையாக இருக்கும்.

இன்றைய சந்தையில் பின் வரும் நிலைகளில் கவனமாயிருங்கள்..

4297 – 4334 – 4356 – 4389 – 4422 – 4453

panguvaniham எழுதியவை | ஜூலை 1, 2009

01, ஜூலை 2009

ஆச்சர்யம்….இது நேற்றைய சந்தைக்கு பொருந்தும். நுட்ப குறியீடுகள் சாதகமாயிருந்தும், Gapup ஆக துவங்கிய போதும் நாளின் நெடுகில் வீழ்ச்சியடைந்தது ஆச்சர்யமே!, சமயங்களில் இம்மாதிரியான நிகழ்வுகள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

ஒரே நாளில் சந்தைகள் வலுவிழந்ததை போலவொரு தோற்றம் உருவாகியிருக்கிறது. இன்றைய சந்தைக்ளை பொறுத்தவரையில் பெரிதாய் எழுதிட ஏதுமில்லையென்றே கருதுகிறேன்.

தேசிய நிஃப்டி 4343 நிலைகளுக்கு மேல் உயரும் வாய்ப்பிருக்கிறது. 4250 நிலைகளுக்கு கீழ் பெரிதாய் சரியும் வாய்ப்பிருக்கிறது.

பட்ஜெட் வரையிலும் சந்தைகளின் போக்கு புதிராகவே இருக்கும்.

panguvaniham எழுதியவை | ஜூன் 30, 2009

30, ஜூன் 2009

எதிர்பார்த்ததை போல நேற்றைய சந்தைகள் ஆரம்பத்தில் தயங்கினாலும் நாளின் நெடுகில் சீராக உயர்ந்தன. தேசிய நிஃப்டியின் முக்கிய தடை நிலையான 4444 நிலைகளில் ஏற்பட்ட Selling pressure காரணமாய் நாளின் முடிவில் 4390 களில் முடிவடைந்திருக்கின்றன.

இன்று மாதத்தின் கடைசி நாள்….மே மாதத்தின் முடிவு நிலையான 4449 நிலைகளுக்கு மேல் சந்தைகளை முடிவடைய வைக்க operators முயல்வர். இதில் அவர்கள் வெற்றி காணும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன். இவ்வ்வாறு உயர்த்தி முடிப்பதில் அவர்களுக்கு நிறையவே ஆதாயமிருக்கும்.

எதிர்வரும் பட்ஜெட் குறித்து நிதியமைச்சரைத் தவிர அனைவரும் ஆளாளுக்கு ஒரு கருத்தினை முன் வைக்கின்றனர். உலோகத்துறை, எண்ணை மற்றும் எரிவாயு, Power sector போன்றவைகளுக்கு நிறைய சலுகைகள் அறிவிக்கப்படுமென்கிற எதிர்பார்ப்பில் அந்த பங்குகள் உயரும் என்பதால் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

தற்போதைய நிலையில் சந்தைகள் வலுவான நிலையில் இருப்பதாகவே கருதலாம். நுட்பக் குறியீடுகள் சந்தைகளை மேலும் உயரங்களுக்கு இட்டுச் செல்ல தயாராக இருக்கின்றன. இன்றைய சந்தையில் துவக்கத்தில் 4444 நிலைகள் உடைபடுமாயின் 4500 சாத்தியமாகும்.

அதே வகையில் முக்கிய தாங்கு நிலையாக 4372 இருக்குமென எதிர்பார்க்கிறேன். ஒரு வேளை இந்த நிலைகள் உடைபட்டாலும் கூட 4351 நிலைகளில் புதிய Buying pressure உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

panguvaniham எழுதியவை | ஜூன் 29, 2009

29, ஜூன் 2009

மத்திய நிதி நிலை அறிக்கைக்கு முந்தைய வாரம்….

சந்தைகள் நிறைய எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு இயங்கும் வாரமாக இருக்கும்.கடந்த வெள்ளியன்று எதிர்பார்த்ததை போலவே நாளின் பிற்பாதியில் ஒரு Short covering rally உருவாக்கப்பட்டு சந்தைகள் உயர் நிலைகளில் முடிக்கப் பட்டிருக்கின்றன.

சமீபத்தைய அனுபவங்களில் இத்தகைய உயர்த்துதல்கள் அல்லது உயர் நிலைகளுக்கு அருகில் முடிக்கப்படுதல் அடுத்த நாளைக்கு சிறிய முதலீட்டாளர்களுக்கு/வர்த்தகர்களுக்கு விரிக்கப்படும் வலையாகவே இருந்து வருகிறது. கவனம் தேவை.

நுட்பக்குறியீடுகளின் படி சந்தைகளில் நிலவி வந்த மந்தமான பின்னடைவு முடிந்து விட்டதாகவே கருதுகிறேன். தேசிய நிஃப்டி 4444 நிலைகளை தாண்டும்பட்சத்தில் சந்தையின் உயர்வின் வேகம் அதிகரிக்கும். தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டியில் 4332 வலுவான தாங்கு நிலையாக இருக்கும்.

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் சற்று தடுமாற்றாத்துடன் முடிவடைந்திருப்பதன் எதிரொலி இன்றைய ஆசிய சந்தைகளின் துவக்கத்தில் எதிரொலிக்கலாம். நாளின் நெடுகில் மீளும் வாய்ப்புகள் இருக்கின்றான.

எதிர்வரும் மத்திய நிதி நிலை அறிக்கை நாட்டின் வர்த்தக கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தருவதாக அமையுமென எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தைய பொருளாதார பின்னடைவில் பாதிக்கப் பட்டிருக்கும் துறைகளை ஊக்குவிப்பதும், வளரும் துறைகளான Power sector க்கு மேலதிக சலுகைகளை அரசு வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த  எதிர்பார்ப்புகள் வரும் நாட்களில் கட்டுமானத்துறை, மின்சார உற்பத்தி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொடர்பான துறைகளின் பங்குகளில் எதிரொலிக்கும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

இன்றைய சந்தைகள் 4383 நிலைகளுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் வரும் நாட்களில் சந்தையின் உயர்வுகள் உறுதியாகும்.

நாளின்  நெடுகில் பின்வரும் நிலைகளில்  கவனமாயிருங்கள்…

4243 – 4276 – 4310 – 4334 – 4354 – 4391 – 4421 – 4444 – 4474 – 4506

பழைய பதிவுகள் »

வகைகள்