நண்பர்களே….
இரண்டரை வருடங்கள், சற்றேறக்குறைய 980 நாட்கள்….800 வது பதிவு….
இத்தனையும் விளையாட்டாய் எதிர்பார்ப்புகள் இல்லாது துவங்கிய முயற்சியே….
அப்போது தமிழில் யாரும் செய்யாத ஒன்றை செய்வதாக உணர்ந்த பெருமிதம்…
இன்றைக்கு தமிழில் என்னை விடச் சிறப்பாய் பதிவிட பலர் வந்து விட்ட நிதர்சனத்தில் நானும் அவர்களுடன் ஓடிக்கொண்டிருக்கிற பெருமிதம்….
இடையிடையே தளர்ந்தாலும், ஓய்வெடுத்து எழுத ஆலோசனையும் கொடுத்து எனக்காய் காத்திருந்த, காத்திருக்கிற ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்புகளை தக்கவைத்திருக்கும் பெருமிதம்…
இரண்டரை வருடத்தில் சிலருக்கேனும் இந்த தளம் பயனுள்ளதாயிருந்ததும், அவர்கள் தங்களின் வெற்றிகளை என்னோடு பகிர்ந்து கொண்டபோது உணர்ந்த பெருமிதம்….
இப்படி நிறைவான உணர்வுகளோடு இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
குறைகள் இல்லாமலில்லை, பட்டியலிட நிறையவே குறைகள் இருக்கின்றன.
எனது தொழில் ஒன்றில் பங்குதாரகளால் ஏமாற்றப்பட்டு சற்றேறக்குறைய இருபது லட்சத்திற்கும் மேல் கடன் என் தலையில் கட்டப்பட்ட போது,அதை அடைக்க போராடிய தருணத்தில் நான் தளர்ந்து போனதென்னவோ உண்மைதான். கவனக்குவிப்பு இல்லாது தினமும் பதிவெழுதுவது சாத்தியமில்லை என்பதால்தான் பதிவுகளை இடைநிறுத்த வேண்டி வந்தது. ஒரு கட்டத்தில் பங்குவணிகம் தளத்தினை வேறு யாரும் தொடர்ந்து நடத்த முன்வந்தால் அவர்களிடம் ஒபப்டைத்துவிடவும் தயாராக இருந்தேன்.
கட்டண சேவையொன்றினை ஆரம்பித்த நிலையில், எனது பிரச்சினைகளின் தீவிரத்தினால் சேவையினை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதால் அந்த முயற்சியினை ஒரே மாதத்தில் நிறுத்தியது பெரிய அளவில் பின்னடைவு, என்னை பெரிதாய் நம்பியிருந்தவர்களுக்கு உதவ முடியாது போன குற்ற உணர்ச்சி இன்னமுமிருக்கிறது.
பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காத குறையுமிருக்கிறது. வரும் நாட்களில் இதை நிவர்த்திக்க முயற்சிக்கிறேன்.
இறுதியாக ஒன்று…
நண்பர்களே ! இத்தனையும் உங்களால் மட்டுமே சாத்தியமானது…
அத்தனை அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்கிற ஒற்றைச்சொல் சிறிய வார்த்தையாகவே இருக்கும்…என்னில் அதன் அர்த்தமும், ஆழமும் பெரிது.
நன்றி….
-சரவணக்குமார்.
இனி இன்றைய சந்தைகளை கவனிப்போம்…
வாரத்தின் கடைசி நாள்,மத்திய நிதி நிலை அறிக்கை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.
இன்றைக்கு மத்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்டுகிறது.
இந்த இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சந்தைகள் தெளிவான திசையொன்றினை எடுக்கும். தினவர்த்தகர்கள் இயன்றவரையில் இன்றைய சந்தையினை தவிர்த்துவிடுவது நல்லது.
தேசிய் நிஃப்டியில் 4283 மிக முக்கிய தாங்கு நிலையாக இருக்கும் இந்த நிலைகள் உடைபடும் பட்சத்தில் 4222 வரையில் சந்தைகள் கீழிறங்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மேல் நிலையில் 4366 வலுவான தடை நிலையாக இருக்கும்.